“ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை”

202

இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதாகவும் இலங்கை பொது நிர்வாகத்துறை செயலாளர் பிரியந்தா மயதுன்னே தெரிவித்துள்ளார்.

நாடு பஞ்சத்தை எதிர்நோக்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவோ அரசிடம் பணம் இல்லை என்றும் பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட, ஆடம்பரமாக மாறி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, நிபந்தனைகளுடன் வரும் சர்வதேச நிதியுதவி உள்ளிட்ட தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று பிரியந்தா மயதுன்னே கூறினார்.