தங்க நகை என்பது அணிகலனாக மட்டுமில்லாமல் ஒரு சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? பெரும்பாலான குடும்பங்கள் தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சட்ட வரம்புகள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரியாது.
1963ல், 14 கேரட்டுக்கு மேல் தூய்மை கொண்ட தங்க நகை தயாரிப்பு தடைசெய்யப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அரசு 1968 தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை இயற்றியது. இது குடிமக்கள் தங்கத்தை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ வைத்திருப்பதை தடை செய்தது மேலும் அனைத்து தங்கக் கட்டிகளையும் தங்க நகையாக மாற்றுவதைக் கட்டாயமாக்கியது.
திருமணமான பெண் ஒருவர் அதிபட்சமாக 500 கிராம் நகைகள் அதாவது 62.5 சவரன் நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் அதிகபட்சமாக 250 கிராம் தங்க நகைகள் அதாவது 31.25 சவரன் வைத்திருக்கலாம். ஆண் ஒருவர் 100 கிராம் நகைகள், அதாவது 12.5 சவரன் நகைகளை வைத்திருக்க அனுமதி உண்டு என சொல்லப்பட்டிருக்கிறது.
-ரதி ரவி