பூஜ்ஜிய கார்பன் இலக்கை எட்ட தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

99
Advertisement

புவிவெப்பமடைதல் பிரச்சனை அதிகரித்து வரும் சூழலில்,இந்தியா பூஜ்ஜிய கார்பன் இலக்கை 2070ல் எட்ட கெடு நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசோ 2050க்குள்பூஜ்ஜிய கார்பன் இலக்கை எட்ட முனைப்பு காட்டுவது நல்ல செய்தி.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடு.2ல் Tamilnadu Green Climate Company(அரசு) மற்றும் Counsil for Environment,Energy and Water(CEEW-தனியார்)நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தின் ஒவ்வொரு துறை வாயிலாக வெளியிடப்படும் பசுமைக்குடி வாயுக்களின் அளவை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

Tamilnadu Greenhouse Gas Inventory and Path-ways for Net-Zero Transition’ எனும் அந்த அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்காத வண்ணம்(தமிழகத்தின் பரந்தூரில் ஏற்படுத்தப்பட உள்ள இரண்டாம் விமான நிலைய பரப்பில் 26.54% ஈரநிலங்கள் என இருந்தும்,13 கிராம உள்ளூர் பஞ்சாயத்துகள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும்,அரசு அதை துளியும் மதிக்காமல்,விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது,காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்டால் சரியான வளர்ச்சிப்பணியா?எனும் கலந்துரையாடலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டாமா?)திட்டங்களை நிறைவேற்ற,தற்போதைய ஆற்றல் சூழலிலிருந்து மெல்ல பூஜ்ஜிய கார்பன் திட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற செய்தி உள்ளது.

தமிழகத்தில் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு 2005-2019ல் 84% உயர்ந்துள்ளது.(2005ல் 101 மில்லியன் டன் கரியமிலவாயு சமான நிலையிலிருந்து,2019ல் 184 மில்லியன் கரியமில வாயு சமான நிலைக்கு பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு உயர்ந்துள்ளது.)

2070ல் பூஜ்ஜிய கார்பன் நிலைய எட்ட 475 கிகாவாட் சூரிய மின்சக்தி,90 கிகாவாட் காற்றாலை மின்சக்திக்கும் மாறினால் மட்டுமே,பூஜ்ஜீய கார்பன் இலக்கை தமிழ்நாடு அடைய முடியும். அதற்கு இரண்டு துறையிலும் ரூ.15 இலட்சம் கோடி முதலீடு தேவைப்படும். அரசு மனது வைத்தால் இது சாத்தியமே.

2019ல், தமிழ்நாட்டில் வெளியான பசுமைக்குடி வாயுக்களின் அளவு 184 மில்லியன் டன் கரியமிலவாயு சமான நிலைக்கு உயர்ந்ததில்,77% ஆற்றல் துறையின்(Energy)மூலம் வெளியாகியுள்ளது.
வேளாண்மை,காடுகள்,நில பயன்பாடு-AFOLU-Agriculture-Forestry-Land Use)-12%-AFOLU மூலம் 2005ல் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு,4% என இருந்தது 2019ல் 12% என கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆக இந்த துறையில் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டைக் கட்டுபடுத்த என்ன செய்ய வேண்டும் எனத் தீவிரமாக ஆலோசிக்கப்பட வேண்டும்.

கால்நடைகளின் வளர்ப்பு காரணமாக AFOLU ல் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு 50% என கணக்கிடப்பட்டுள்ளதால்,அதை குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்தப்படியாக, அரிசி உற்பத்தி அதிக பசுமைக்குடி வாயுக்களை வெளியிடுவதால் அரிசிக்கு பதில் சிறுதானியங்கள் உற்பத்திப் பரப்பை விரிவாக்குவது நல்ல பலனைத் தரும்.

பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கு AFOLUல் 3ம் முக்கிய காரணமாக உரங்களின் பயன்பாடு என இருப்பது தெரியவந்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை.(எண்ணூர் உரத்தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிந்து பாதிப்பை ஏற்படுத்தியதால்,அதை மூடுவது பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டை குறைக்க உதவும். (அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?)

தொழிற்துறையிலிருந்து 6% பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடும்,கழிவுமேலாண்மைத் துறையிலிருந்து 5% வெளியீடும் 2019ல் தமிழகத்தில் இருந்துள்ளது.

ஆற்றல் துறையில்(Energy) பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு 2005ல் இருந்ததைவிட 2019ல் 75% உயர்ந்துள்ளது.

இதில் முக்கிய பிரச்சனை என்னவெனில்,மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி மின்சாரம் மூலமே ஆற்றல் அதிகம் தமிழகத்தில் பெறப்படுகிறது.

2020-21ல் தமிழகத்தின் மின்தேவை 110 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. அதை பூர்த்தி செய்ய நிலக்கரி மின்சாரத்தை அதிகரிக்க 5 இலட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இந்தோனேசிய அரசிடமிருந்து தமிழக அரசு மத்திய அரசின் அனுமதியோடு வாங்கத் திட்டமிட்டிருப்பது சரியா?

இந்த நிலை மாறி புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரியமின்சக்தி,காற்றாலை மின்உற்பத்தி தமிழகத்தில் கணிசமாக அதிகப்படுத்தப்பட வேண்டும்.

முழுத் தமிழ்நாட்டையே ரியல்எஸ்டேட் தொழிலாக மாற்றும் எண்ணம் அதிக அளவில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

தொழிற்துறையில், சிமெண்ட் உற்பத்தி மட்டும் 23% பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கும்,19% இரும்பு+எஃகு தொழில்துறையிடமிருந்து பசுமைக்குடி வாயுக்கள் வெளியாவதால்,புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரித்து, தமிழ்நாட்டையே ரியல்எஸ்டேட் தொழிற் நிறுவனத்திற்கு உகந்த இடமாக பார்ப்பதை நிறுத்திக்கொண்டால் தான் விடிவு பிறக்கும்.

கழிவு மேலாண்மைத் துறையில், முனிசிபல் திடக் கழிவுகள்,வீட்டு மற்றும் தொழிற்நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கு காரணமாக இருப்பதால், கழிவு மேலாண்மைத்துறைக்கு உரியமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் தான் சூழல்ரீதியாக பலன்கள் கிட்டும்.(செங்கல்பட்டு மாவட்டக் கழிவுகள் சிகிச்சை அளிக்கப்படாமல் கொளவாய் ஏரியில் கொட்டப்படுவது சரியா?)

தமிழக கடலோர பகுதிகளின் சூழல் அமைப்பை பாதுகாக்க,உலக வங்கியிடம் 1,675 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் Tamilnadu Blue Carbon Agency மூலம் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படும் என அரசு கூறினாலும்,மன்னார் வளைகுடா பகுதியில் காப்பாபைகஸ் அல்வெரெசி எனும் ஊடுறுவும் கடல் பாசி பவளப்பாறைகளை அழித்து வருவது கண்டறியப் பட்டும்,அதை நீக்கி மீன் வளத்தையும்,சுற்றுச்சுழலையும்,புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தவறியது எப்படி சரியாகும்?

சுற்றுச்சூழல் துறையிலும்,புவிவெப்பமடைதலைக் காப்பதிலும் நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருவதாக((Walked the Talk)தமிழக அரசு வனத்துறை செயலர் அவர்கள் கூறினாலும்,மேற்கூற.பட்ட கருத்துகளை செயல்படுத்தினால் மட்டுமே அது உண்மை என ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழக அரசு செவிசாய்க்குமா?

– மருத்துவர் புகழேந்தி