கிராமத்து ஸ்டைலில் கமல்ஹாசன்…அல்டிமேட் தான் அடுத்த படம் !

280
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தை முடித்துவிட்டார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை வரும் மார்ச் 14-ம் தேதி அறிவிக்கவிருக்கிறது படக்குழு. அநேகமாக, மே மாதத்தில் இதன் ரிலீஸ் இருக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்’ படப்பிடிப்பு நடைபெற்றுகொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்களுக்காக கதைகளைக் கேட்டு வந்தார் கமல்ஹாசன்.


அந்த லிஸ்ட்டில் இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ‘இந்தியன் 2’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு வேறு இருக்கிறது. இதற்கிடையே தன்னுடைய கதை, திரைக்கதையில் மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் கமல். அதனை அவருடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குகிறார். பாலிவுட்டில் ‘பிர்சா முண்டா’ பயோபிக்கும் அவர் கைவசம் இருக்கிறது. அதனை முடித்துவிட்டுதான், கமல் படத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறனுக்கும் ‘வாடிவாசல்’ இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது, ‘விருமன்’ படத்தை முடித்திருக்கும் இயக்குநர் முத்தையா, இந்தக் கதையை கமல்ஹாசனுக்காக வைத்திருந்ததாகவும் 25 நாள்கள் கமல்ஹாசன் இந்தப் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதாகச் சொன்னதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. அப்படி இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்தால், ‘விருமாண்டி’க்குப் பிறகு, அவர் நடிக்கும் கிராமத்து படம் இதுவாகத்தான் இருக்கும் .