சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் வராமல் அலைகழித்ததால், விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

197
Advertisement

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பாசன வாய்க்காலை ஆய்வு செய்ய புவனகிரி வட்டாட்சியர் தலைமையிலான  வருவாய் துறை அதிகாரிகள் வருவதாக விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் வராததால் கோபமடைந்தனர்.

இதனால், அக்கரமிப்புகளை அகற்ற கோரி பாசன வாய்க்கால் கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாசன வாய்க்காலை தூர்வாராவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.