நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.
தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சாதாரண கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்திருக்கிறார்கள் எனவும், விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மகளின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்ட ரஜினிகாந்த் மீண்டும் அவரை தனுஷுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இருந்ததாகவும், அதற்கு தனுஷ் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.
இதற்கு முன்பு தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் பிரச்னை வந்த போது, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் ரஜினிகாந்த் சேர்த்து வைத்தார். இந்த முறையும் அப்படியான முயற்சிகளை எடுத்திருக்கிறார்.
முதலில் எந்த பதிலும் இல்லையென்றாலும், தற்போது அதற்கான பலன் கிடைத்திருக்கிறதாம்.
அதாவது தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஆனால் அது நிரந்தரமாகவா அல்லது தற்காலிகமாகவா எனத் தெரியவில்லை.