Advertisement

விழுப்புரத்தில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டியில் 5 வயது ஆண் குழந்தை உறங்கிய நிலையில் கிடந்துள்ளது.

குழந்தை தூங்குவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் தட்டி எழுப்ப முயற்சித்தபோது, அது அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் குழந்தை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் குழந்தையின் புகைப்படத்தை காட்டி அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இன்னிலையில் 5வயது ஆண் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை யாருடையது? அங்கு எப்படி வந்தது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.