ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு ஒமிக்ரான்

331

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளது.

இங்கு கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

அண்மையில் கேரளா சென்று விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், இருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் உடன் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 21 மாணவிகள், 8 மாணவர்கள் அடங்குவர். இதனால் அங்கு தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.