பிஸ்கட் தின்றால் புற்றுநோய்…?

    272
    Advertisement

    பிஸ்கட் தின்றால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அநேகம்பேரின் அன்றாடத் தின்பண்டங்களில் முதலிடம்பெறுவது பிஸ்கட். ஆனால், அளவுக்கதிமாக பிஸ்கட் தின்றால் புற்றுநோய் வரலாம் என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

    விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிஸ்கட் தின்பது உடல்நலத்துக்குத் தீங்கானது. பிஸ்கட்டிலுள்ள புற்றுநோய்க் காரணிகள் மரபணுத் திசுக்களில் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

    அண்மையில் ஹாங்காங் நாட்டில் 60 விதமான பிஸ்கட்டுகளை அங்குள்ள நுகர்வோர் கண்காணிப்புக் குழு ஆய்வினர் ஆய்வுசெய்தனர். அப்போது பிஸ்கட்டில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் நிர்ணயித்துள்ள அளவைவிட அதிகமான ரசாயனங்கள் உள்ளதையும், புற்றுநோயை உண்டாக்கும் கிளைசிடோல் மற்றும் அக்ரிலாமைடு ஆகிய 2 ரசாயனங்கள் உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.

    இந்த ரசாயனங்கள் சிறுநீரகம், ஆண் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றையும் பாதிக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    மேலும், அதிகமான இனிப்பு, அதிகமான சோடியம் போன்றவை இந்த பிஸ்கட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதவிர, 40 சதவிகித பிஸ்கட்டுகளில் தவறான தகவல்களே இடம்பெற்றுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

    முழுவதும் கோதுமையால் தயாரிக்கப்பட்டது, ஓட்ஸ் நிறைந்தது, நார்ச்சத்து மிகுந்தது, இனிப்பில்லாதது என விளம்பரம் செய்யப்படுவதெல்லாம் வியாபார யுக்திகளே என்கிறது அந்த ஆய்வு..

    எளிதான தின்பண்டமாகக் கருதப்படும் பிஸ்கட்டுகள் மிகவும் ஆபத்தான நோய்களுக்கு அடிகோலுவதாய் அமைந்துள்ளது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.