மாநிலங்களவைக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

202

நீண்ட ஆலோசனைக்குப்பிறகு மாநிலங்களவைக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் R.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜுன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன.

அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது.

மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.