அமலாக்கத்துறையின் மலைக்கவைக்கும் அதிகாரங்கள் இதுதான்..! என்னென்ன தெரியுமா..?

193
Advertisement

நிதி சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் முதன்மையான இந்தியரசின் விசாரணை அமைப்பாகும் அமலாக்கத்துறை.

பண மோசடி மற்றும் வெளிநாட்டு பணபரிவர்தனை தொடர்பான வழக்குகளை இது விசாரிக்கும். இது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் ரெவென்யு டிபார்ட்மெண்ட்க்கு கீழ் வரும்.

1956 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் ‘என்போர்ஸ்மென்ட் யூனிட்’ என்ற பெயரில் அமலாக்கத்துறையானது, இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. மும்பை, கொல்கத்தா ஆகிய இரண்டு இடங்களில் கிளை இருந்த நிலையில், சென்னையில் 1957 ஆம் ஆண்டு கிளை அமைக்கப்பட்டது.

ஐஆர்எஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளில் இருக்கக்கூடிய வருமான வரி அலுவலர் உள்ளிட்டோர் அமலாக்கத் துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அமலாக்கத்துறை நினைத்தால் வழக்கில் தொடர்புடையவர்களுடைய இடங்களில் சோதனை நடத்த முடியும். அவர்களது சொத்துக்களை முடக்கி வைக்க முடியும். தேவைப்பட்டால் கைதும் செய்ய முடியும்.

இந்த அதிகாரங்களை கடந்த 2022 ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக உறுதி செய்தது. அமலாக்கத் துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19 இன் கீழ்தான் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஒரு நபர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டால் அடுத்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தாக வேண்டும். அதுபோலவே அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய முடியாது. ஒரு நபர் மற்ற விசாரணை அமைப்புகளிடம் புகார் அளித்து அதனடிப்படையில் தான் அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொள்ள முடியும். அமலாக்கத் துறையின் பெரும்பாலான வழக்குகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.