அண்மைக்காலமாக பேங்க் அக்கவுண்டிலிருந்து திருட்டுத்தனமாகப்
பணம் எடுக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருவதை
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துவருகிறோம்.
இந்தத் திருட்டுக் கும்பல் எப்படி பணம் திருடுகிறது என்பதை
அறிந்துகொண்டால், உங்கள் பணம் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்தக் கும்பல் என்ன செய்கிறது தெரியுமா….?
முதலில் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்போரின் செல்போன்
எண்ணுக்கு அவர்களின் வங்கியிலிருந்து அனுப்புவதுபோல் ஒரு
குறுஞ்செய்தி அனுப்பும். அந்தக் குறுஞ்செய்தியில் அவர்களின்
வங்கிக் கணக்குடன் PAN CARD விவரங்கள் வேண்டியிருப்பதால்,
இந்த லிங்கில் சென்று ஆன்லைனில் அப்டேட்செய்யவும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஒரு URL Link இருக்கும்.
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்ப்பவர்கள் அதனை வங்கியிலிருந்து
அனுப்பப்பட்டது என்று நம்பி லிங்கின் உள்நுழையும்போது, அது
வங்கியின் வெப்சைட்போல் உருவாக்கப்பட்ட மோசடியான Publishing
Websiteஐத் திறக்கிறது.
அது பார்ப்பதற்கு வங்கியின் பெயரில், வங்கியின் வெப்சைட்டில் உள்ளது
போன்றே காணப்படும். அதில் அவர்களின் வங்கிக் கணக்கு எண், ATM
CARD NUMBER, OTP போன்ற விவரங்களைப் பூர்த்திசெய்யுமாறு
கோரப்படுகிறது. அதனை வாடிக்கையாளர்கள் பூர்த்திசெய்தவுடன்
அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்படுகிறது.
எந்த வங்கியும் தனது வாடிக்கையாளருக்கு பான் கார்டு லிங்க்
செய்யவும் அல்லது KYC (KNOW YOUR CUSTOMER) UPDATE
செய்யவும், மெசேஜ்மூலமாக லிங்க் எதுவும் அனுப்புவதில்லை.
ஆனால், இதனை அறியாத பேங்க் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப்
பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது.
எனவே, பேங்க்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
மோசடி மெசேஜ்களை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்கவும்.
எந்தவொரு SMS, PHONE அழைப்பையும் நம்பிவிடாதீர்கள்.
அப்படி ஒருவேளை வந்தால், நீங்கள் அக்கவுண்ட் வைத்துள்ள
வங்கிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் அல்லது
பொறுப்பு அதிகாரியை அணுகித் தெரிந்துகொண்டு அதன்படி
செயல்படுங்கள்.
கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா எனக் கேட்டால், கள்வன்
தான் பெரியவன். புதுசு புதுசா ஏமாற்றக் கிளம்பும் கும்பலைப்
போலீஸ் கைதுசெய்து வந்தாலும் காளான்கள்போல புதுப்புதுக்
கும்பல்கள் கிளம்புகின்றன. ஆகவே, நாமும் விழிப்புணர்வோடு
செயல்படவேண்டும்.
