கர்நாடக தேர்தல் முடிவுகள் : காங்கிரஸுக்கு கை கொடுத்த ‘40% கமிஷன் சர்க்கார்’ … பாஜகவை வீழ்த்திய ஊழல்! 2023…

168
Advertisement

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது. அம்மாநிலத்தில் பாஜக தோல்வியை சந்திக்க காங்கிரஸ் கையில் ஊழல் எடுத்த வியூகம்தான் காரணம் என கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி 223தொகுதிகளில் போட்டியிட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதன்மூலம் கூட்டணி இல்லாமலேயே காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியினர் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் பல இடங்களில் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பாஜக தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று கூறி வரும் நிலையில், பாஜக ஊழல் கட்சி என்ற முழக்கத்தோடு கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே கட்சித்தாவலை தடுக்கும் வகையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.