பாகிஸ்தானில், ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

103
Advertisement

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனையடுத்து, அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், ஜாபராபாத் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சரமாரியாக சுட்டு தள்ளினர்.  இதில், 6 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் ஜாபராபாத் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.