தாம்பரம் அருகே நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்…

222
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார்.

இவரது மனைவி தாரிகா, தனது இரண்டு மகன்களையும் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் பழகிக்கொண்டிருந்த சஸ்வின் வைபவ், திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் குன்றத்தூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில் நீச்சல் குளம் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நீச்சல் குளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் நீச்சல் குளம் உரிமையாளர்கள் பிரபு, நாகராஜ் இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.