அபாய நிலையில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு

390
Advertisement

2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் வேளாண் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், “தமிழ்நாட்டில் 29 மாவட்டங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்வது ஊக்குவிக்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து அமைச்சரின் உரையில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும். முதலமைச்சர் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும். செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என்றும், 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளர்.