2019-ம் ஆண்டு ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தொடங்கியது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதம் பயற்சி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது . இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் மாணவர்ளுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்கள் குறித்த பயிற்சி வழங்கப்படும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படித்தபாடம் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு இந்த திட்டம் வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதில் பங்கேற்க மாணவர்கள் சில அளவுகோலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி தற்போது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க விண்ணப்பிக்க முடியும். 8ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்டியல் ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்.
இந்த திட்டம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி அப்ளிகேஷன் மையம், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையம், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி அப்ளிகேஷன் மையம் ஆகிய 5 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 080 2217 2119 என்ற எண்ணுக்கும், yuvika@isro.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.