இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை அவசியம்-ரஷ்ய அதிபர்

366
Advertisement

இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள தனது எதிரிகளை நாஜிக்கள் என்றும் புதின் விமர்சித்தார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார்.

உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் 8வது ஆண்டையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பல்வேறு நாடுகளில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த போருக்கு ரஷ்ய மக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்பதை காட்டும் வகையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இடம்பெற்ற கலை நிகழ்ச்சியும் பொதுக் கூட்ட மேடையில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்