ஆம் ஆத்மியின் புதிய திட்டமா… மாநிலங்களவை வேட்பாளராக களமிறங்கிறாரா ஹர்பஜன் சிங் ?

237
Advertisement

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது . மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்தக் கட்சியின் பகவந்த் சிங் மான் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தேர்தலில் வென்று பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தவுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஆம் ஆத்மி கட்சிக்கும் என்னுடைய

நண்பரும் முதல்வர் வேட்பாளருமான பகவந்த் சிங் மானிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பகத் சிங்கின் கிராமத்தில் பதவியேற்க உள்ளது மேலும் சிறப்பான ஒன்று. இந்தப் படம் மிகவும் அற்புதமான படம். அவருடைய தாய்க்கு இது சிறந்த தருணமாக அமைந்திருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் தற்போது ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் நியமன உறுப்பினராக மாநிலங்களவையில் இருந்தார். அவருக்கு பிறகு சமீபத்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.