சூரியனில் வளரும் கரும்புள்ளியால் பூமிக்கு அபாயமா? 

303
Advertisement

தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு பூமி ஏற்றதாக அமைய முக்கிய காரணமாக அமைந்திருப்பது சூரியன்.

வெளிச்சம், வெப்பம், ஆற்றல் என நம் வாழ்க்கைக்கு இன்றியமையா சக்தியாக செயல்படும் சூரியனில் வியக்க வைக்கும் பல அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கரும்புள்ளிகள்.

5,505 டிகிரி வெப்பம் கொண்ட சூரியனில் ஆங்காங்கே காணப்படும் கரும்புள்ளிகள், சூரியனின் பொதுவான வெப்பத்தை விட சில ஆயிரம் டிகிரி குறைவாக இருப்பதாலேயே அவை கருப்பாக காட்சியளிக்கிறது.

அண்மையில், பூமியில் இருந்து பார்க்கக்கூடிய சூரியனின் பகுதியில் புதியதாக 8 கரும்புள்ளிகள் தோன்றி இருப்பதாகவும், அதில் AR3038 என பெயரிடப்பட்டுள்ள ஒரு கரும்புள்ளி 24 மணி நேரங்களில் இரண்டு மடங்காக வளர்ந்து இருப்பதாகவும் வானிலை கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையை NASA உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. கரும்புள்ளி மேலும் வளர்ந்து வெடித்தால், நேரடியாக பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், செயற்கைகோள்களின் செயல்பாடு மற்றும் ரேடியோ சிக்னல்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.