ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 51 மணி நேர சீரமைப்புக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது…

161
Advertisement

கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,

பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 51 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடக்கி வைத்தார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தை கடந்துச் சென்றது. விபத்து நடந்த இடத்தில் 2 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டதாகவும், ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கம்போல ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எங்கள் கடமை இன்னும் முடியவில்லை என்று கூறிய அவர், மாயமான நபர்களை கண்டறிந்து விரைவில் அவர்களை தங்கள் குடும்பங்களோடு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.