10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்த இளைஞர்கள் கைது

319

தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் மது குடிப்பது போலவும் பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி குடிக்க கொடுத்ததாகவும், பீடி பற்ற வைத்து புகைக்க கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பகுதியை சேர்ந்த சங்கையா, குமார், ரமேஷ், சிவராஜ் ருத்ரப்பா, அழகப்பன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களோடு இருந்து தலைமறைவான சிவருத்ரப்பா மல்லேஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.