வேண்டுகோள் விடுத்த ரஹ்மான்…ஏற்றுக்கொண்ட இளையராஜா

254
Advertisement

நேற்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இசைஞானி இளையராஜா துபாயில் உள்ள தனது ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் “எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் அவர் ஒன்றை இசையமைப்பார் என்று நம்புகிறேன்!” என்று பதிவிட்டு இருந்தார்.


இந்த புகைப்படம் நேற்றிலிருந்து இணையத்தில் தீயாய் பரவியது. இருவரது புகைப்படங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் காணப்பட்டது. மார்ச் 5-ம் தேதி ,உலகின் மிகப்பெரிய கலாச்சாரக் கூட்டமான எக்ஸ்போ 2020 துபாயில் இளையராஜா பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சி முடிந்ததும், இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மானை துபாயில் உள்ள அவரது ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் சந்தித்தார்.


இந்நிலையில் இன்று, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுமானின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “கோரிக்கை ஏற்கப்பட்டது.. விரைவில் இசையமைக்கத் தொடங்குவோம்” ரகுமானின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார் இளையராஜா. தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்த இருவரின் நட்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.