Wednesday, January 22, 2025

பழைய கிச்சன் கேபினட் வாங்கியவருக்குக் கிடைத்த யோகம்

பழைய கிச்சன் கேபினட் வாங்கியவர் திடீரென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
ஜெர்மனியில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள பிட்டர்ஃபெல்டு பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஹெல்லர் 50 வயது முதியவர்
ebay மூலம் பழைய சமையல் கேபினட் ஒன்றை வாங்க விரும்பினார். தனக்கேற்ற
விதத்தில் சமையல் கேபினட் கிடைத்ததும் மகிழ்ந்தார். ஆனால், அதன் விலை 300 யூரோ
என்று குறிப்பிட்டிருந்தது. ஒருவழியாகப் பேரம்பேசி 240 யூரோவுக்கு வாங்கினார்.

அந்தக் கிச்சன் கேபினட்டை வீட்டுக்குக் கொண்டுவந்தார். தனது வீட்டில் சமையல்
கூடத்தில் அதனை நிர்மாணிக்கும்போது அதனுள் 1 லட்சத்து 50 ஆயிரம் யூரோ ரொக்கப்
பணமாக இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தார். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1 லட்சத்து
58 ஆயிரத்து 155 அமெரிக்க டாலருக்குச் சமம் ஆகும்.

அந்தப் பணத்தின்மீது ஆசைப்படாத ஹெல்லர் உடனடியாக சமூக வீட்டுவசதி நிர்வாக
இயக்குநர் மூலம் காவல்துறையை அணுகி விவரத்தைச் சொன்னார். காவல்துறை நேரில்
வந்து பார்த்தபோது மேலும் பல யூரோ இருந்தது.

அதனால் கிச்சன் கேபினட்டின் முதல் உரிமையாளரைத் தேடியது காவல்துறை. அவர்களின்
தேடலில் காவல்நிலையம் அருகே வசித்துவரும் 91 வயது மூதாட்டிதான் அவர் என்பது தெரிய
வந்தது. கணவர் மறைவுக்குப்பின் வீட்டிலுள்ள பொருட்களை விற்றுவிட்டு காவல்நிலையம்
அருகே அந்த மூதாட்டி வருவதும் தெரியவந்தது.

ஜெர்மன் சட்டப்படி 10 யூரோவுக்கு அதிகமாகக் கையில் ரொக்கமாக வைத்திருப்பது
தண்டனைக்குரிய குற்றமாகும். இது மோசடி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் 3 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இப்போது ஹெல்லர் அவற்றை போலீசில் ஒப்படைத்து
விட்டதால் அவரின் நாணயத்திற்கு வெகுமதியாக 4 ஆயிரத்து 500 யூரோ மதிப்புள்ள 3 சதவிகித
கண்டுபிடிப்பாளர் கட்டணத்துக்குத் தகுதிபெற்றுள்ளார்.

Latest news