ஆன்லைன் மோசடியில் இது புது ரகம்
மாத்திரைக்கு ஆர்டர் கொடுத்தால் சாக்பீஸ் அனுப்பிய விபரீதம்

318
Advertisement

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில ஏமாற்றுப்பேர்வழிகள்
புதுசுபுதுசா தினுசு தினுசா ஏமாற்றத் தொடங்கியிருக்காங்க…

சிக்கன் பிரியாணி கேட்டால்…டவலை வறுத்து தந்த விநோதம்….
புத்தாடைக்கு ஆர்டர்கொடுத்தால் பழைய துணிகளை அனுப்பி
ஏமாற்றிய அயோக்கியத் தனம் வரிசையில் மாத்திரைக்கு ஆர்டர்
கொடுத்தால் சாக்பீஸ் அனுப்பி ஏமாற்றிய விபரீதமும் நடந்துள்ளது.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் கோவா அருகே உள்ளது யூனியன்
பிரதேசமான டாமன். சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தொகைகொண்ட
இந்தப் பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.

இங்குள்ள தபேல் என்னும் சிற்றூரில் சாஃப்ட்டெக் ஃபார்மா என்னும்
நிறுவனம் இயங்கிவருகிறது.

இந்நிறுவனம், டெல்லியிலுள்ள யூரோ ஆசியா கெமிக்கல்ஸ் என்னும்
நிறுவனத்திடம் 5 டன் பாராசிட்டமால் மாத்திரைக்கு ஆர்டர் கொடுக்க
விரும்பியது. இதற்காக சாம்பிள் கேட்டது. சாம்பிளும் அனுப்பப்பட்டது.

சாம்பிளில் பாராசிட்டமால் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பிறகு
முன்பணமாக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் யூரோ நிறுவனத்துக்கு
அனுப்பியது சாஃப்ட் ஃபார்மா நிறுவனம்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட யூரோ ஆசியா கெமிக்கல் நிறுவனம்
அதற்குரிய மாத்திரையை சப்ளை செய்தது. சப்ளை செய்யப்பட்ட
பார்சலைத் திறந்து பார்த்து சோதித்தபோது அதில் இருந்த மாத்திரைகளைக்
கண்டு மயக்க நிலைக்குச் சென்றது சாஃப்ட் டெக் ஃபார்மா நிறுவனம்.

காரணம், பாராசிட்டமாலுக்குப் பதிலாக 98 சதவிகிதம் சாக்பீஸ் தூளாக இருந்தது.
இதைக்கண்டு வெறுப்படைந்த சாஃப்ட்டெக் ஃபார்மா நிறுவனம் போலீசில் புகார்
செய்தது.

டாமன் போலீசார் இதுபற்றி விசாரித்தபோது டெல்லியிலுள்ள யூரோ ஆசியா
கெமிக்கல்ஸ் ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்தது. மேலும், தொடர்
விசாரணையில் அந்த நிறுவனத்தின் உண்மையான பெயர் யூரோ ஆசியா
பயோ கெமிக்கல்ஸ் என்பதும், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் நகரில்
செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நுகர்வோர் கடமை. பெரிய நிறுவனங்களும்
அதிக விழிப்போடு செயல்பட்டால்தான் இதுபோன்ற பெரிய ஏமாற்றங்களைத் தவிர்க்க
முடியும்.