சிக்கலான வேலைகளைப் பறவைகள் சுலபமாகச் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்கள் எந்த வேலையையும் எளிதாகச் செய்வதற்கு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட்டனைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல, கஷ்டமான வேலைகளை எல்லாம் சுலபமாகச் செய்துமுடிப்பதற்கென்றே தொடர்ந்து ஆய்வுகள் எல்லாத் துறையிலும் நடந்துவருகின்றன.
ஆனால், கோபின்ஸ் காக்டூ என்னும் பறவைகளைப் பயன்படுத்தி, மிகவும் கடினமானப் பணிகளை மிக எளிதாகச் செய்யமுடியும் என்பதை வியன்னாவின் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்காக அவர்கள் மேற்கொண்ட ஆய்வும் மிகச்சுலபமானதுதான்.
அதாவது, இந்த ஆய்வு மேற்கொள்வதற்கென்றே சிறப்பான மரப்பெட்டி ஒன்றைத் தயாரித்துள்ளனர். காக்டூ பறவை அந்தப் பெட்டியினுள்ளே செல்லமுடியாதவாறு வாசல், அல்லது போதிய இடைவெளி இன்றி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேசமயம்,
அதனுள்ளே முந்திரிப் பருப்புகளை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, அங்கு 9 காக்டூ பறவைகள் கொண்டுவரப்பட்டன. அவை ஒவ்வொன்றும் மரப்பெட்டிக்குள் இருந்த முந்திரிப் பருப்புகளைத் தங்கள் அலகால் எடுக்க முயன்றன. ஆனால், மரப்பெட்டிக்குள் செல்லமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட 3 காக்டூ பறவைகள் மட்டும் சமயோசிதமாக செயல்பட்டன.
நீண்டகுச்சிகளை எடுத்து வந்து, அவற்றை மரப்பெட்டிக்குள் தங்கள் அலகால் நுழைத்து முந்திரிப் பருப்புகளை எடுக்க முயன்று வெற்றிபெற்றன.. அந்த அடிப்படையில் காக்டூ பறவையின் திறனை மதிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், கடினமான அல்லது சிக்கலான வேலைகளை காக்டூ பறவைகளால் எளிதில் செய்யமுடியும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்தப் பறவை இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.