இந்தியாவுக்கு தலீபான்கள் பாராட்டு

341
Advertisement

இந்தியாவைத் தலீபான்கள் பாராட்டியுள்ள தகவல்
இணையத்தில் வைரலாகி வருகிறது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில்
தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து
பொருளாதாரப் பற்றாக்குறையால் அந்நாடு கடும்
சிரமத்தில் உள்ளது. கடுமையான உணவுப் பற்றாக்
குறையும் நிலவி வருகிறது.

சிறுமிகளின் கிட்னிகளை விற்றுத்தான் உணவு சாப்பிடும்
அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மனிதாபிமான உணர்வோடு
ஆப்கானிஸ்தான் நாட்டுக்குப் பல்வேறு உதவிகளைச்
செய்துவருகிறது. உணவுப் பொருள், மருந்துப் பொருள்
போன்றவற்றை இலவசமாகத் தொடர்ந்து வழங்கிவருகிறது.

பாகிஸ்தான் நாடும் ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கியுள்ளது.
ஆனால், அந்தக் கோதுமை சமைத்து சாப்பிடும் அளவுக்குத்
தரமானதாக இல்லையென்று தலீபான் அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளதாக ட்டுவிட்டரில் வீடியோ ஒன்று வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்தியா தரமான கோதுமையை வழங்கியுள்ளதாக
அவர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை
ஆப்கானிய பத்திரிகையாளர் அப்துல்ஹக் ஒமேரி தனது
ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும்
இந்தியாவுக்கு நன்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நட்பு
தழைக்கட்டும். ஜெய்ஹிந்த் என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்
ஹம்துல்லா அர்பாப் என்னும் ட்டுவிட்டர் பயனாளி.

மற்றொரு ட்டுவிட்டர் பயனாளியான நஜிப் ஃபர்ஹோடிஸ்,
ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் வழங்கிய கோதுமை
பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப்போயுள்ளது.
இந்தியா எப்போதும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிசெய்து
வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தயாள குணத்தைத் தலீபான்களும் ஆப்கானிய
மக்களும் புரிந்துகொண்டு பாராட்டியுள்ள தகவல் சமூக
ஊடகத்தில் வைரலாகப் பரவி வருகிறது.