ஊழல் புகார் – பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடி நீக்கம்

379

ஊழல் புகாரில் சிக்கிய பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது.

முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம் என்றும் அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் சிங் மான் அறிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்து, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசு ஒப்பந்தங்களில் ஒரு சதவீத கமிஷன் வாங்க வேண்டும் என்று அதிகாரிகளை நிர்பந்தித்ததாக எழுந்த புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா பதவி நீக்கப்பட்டுள்ளார்.