UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

299

UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட UPI பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் UPI முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் UPI மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. UPI மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே UPI பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.UPI சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.