முகமது நபியை அவதூறாக பேசிய விவகாரம் – அரபு நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பு

293

முகமது நபியை அவதூறாக பேசப்பட்ட விவகாரம் அரபு நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகள் நவீன்குமார் ஜிண்டால், நூபுர் சர்மா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்கிற பரபரப்புசெய்தி வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாதத்தின்போது பாஜகவின் டெல்லி ஊடகப் பிரிவின் தலைவர் நவீன் ஜிண்டால், முகமது நபிகள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.

அதேபோல் நூபுர் சர்மாவும் அறிக்கை ஒன்றை வெளியி்ட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இவர்கள் இருவரும் திடீரென கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று பாஜக தலைமை அறிவித்தது.

மேலும் எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவதை ஏற்கமுடியாது என்றும் அவரவர் மதத்தை பின்பற்றி வாழ அரசியல் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

இதனிடையே கத்தார் அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரை அழைத்து முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து இந்தியாவில் வெளியானது குறித்து தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்தியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குவைத் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமியர்கள் ஒரே தேசத்தவராக எழவேண்டும் என்று ஓமன் நாடு இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி குரல் எழுப்பியுள்ளது.

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் பாஜக தனது நிர்வாகிகள்மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன், விரிவான விளக்கமான அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

இதனிடையே தோஹாவில் இந்தியாவை புறக்கணியுங்கள் என்கிற முழக்கம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நமது நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தோஹாவிற்கு பயணமாகியுள்ள நிலையில் இத்தகைய முழக்கம் பெரும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்றும் இந்திய அரசு அனைத்து மதங்களின்மீதும் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

யாரோ ஒரு சில சக்திகள் கூறிய கருத்துக்கள் இந்தியாவின் கருத்தல்ல என்றும் விளக்கியிருக்கிறது.

இந்நிலையில், தோஹா சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடனான விருந்து நிகழ்ச்சியை அந்நாட்டு இளைய மன்னர் அப்துல்லா பின் அஹமது அல்தானியா திடீரென ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுமுறைப் பயணமாக வெங்கையாநாயுடு சென்றுள்ள நிலையில் இளைய மன்னருடன் மதியவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நபிகள் பற்றிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவக் காரணத்திற்காகவே விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதும் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதும் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் 7 பேராசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் பலரும் வேலைகளுக்காக வழங்கிய ஸ்பான்சார்ஷிப்பையும் ரத்து செய்து வருகின்றனர்.

பாஜக பிரமுகர்களின் சர்ச்சை பேச்சால் இந்தியர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக பணிநீக்கம் என காரணம் கூறப்பட்டாலும், நபிகளை அவதூறு செய்ததே பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமத்துவத்திற்கு பெயர்போன நாட்டில் இப்படி ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அல்ஹதீர் விமர்சனம் செய்துள்ளார்.