தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
![](https://sathiyam.tv/wp-content/uploads/2021/09/vaccine-1024x576.jpg)
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், மாநகராட்சியின் கீழ் உள்ள பொதுப் போக்குவரத்துகள், பொது கட்டிடங்கள், அரசு சார்ந்த பொது இடங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும்,
தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதியில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அரசின் பராமரிப்பில் உள்ள பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று கூறிய அவர், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதியில்லை என கூறினார்.