தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார் .
செங்கல்பட்டு அருகே பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர், பேருந்திலேயே மது அருந்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மது அருந்திய மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளும், பெண்களும் மதுவுக்கு அடிமையானால், பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இளம் வயதிலேயே பாதை மாறிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.