தூத்துக்குடி துறைமுகம் வழியாக அவ்வப்போது சட்டவிரோதமான பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு ,சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் எப்போதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது . துபாய் நாட்டில் இருந்து, தூத்துக்குடிக்கு வந்த சரக்கு கப்பலில் ஒரு சரக்கு பெட்டகம் வந்தது. அதில் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது அதை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். முதல் 2 அடுக்குகளில் பேரீச்சம் பழப் பெட்டிகளும் அதன் பின்புறம் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக அதிகாரிகள் சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது .