பேஸ்புக் மூலம் மளிகை கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்

332

ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி, மளிகை கடைக்காரரை 4வது திருமணம் செய்து  30 சவரன் தங்க நகைகள், பணத்தை சுருட்டிக் கொண்டு  ஓடிய  இளம்பெண்ணையும்,  அவரது 2வது  கணவரையும் போலீசார் கைது  செய்தனர். சேலம்  மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தீபன். மளிகை கடைக்காரரான இவர், பேஸ்புக் மூலம் கவுசல்யா என்ற இளம்பெண்ணுடன் பழகி, கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு கெளசல்யா வேறு சிலருடன் பேசியதால், அதனை தீபன் கண்டித்துள்ளார். இதனால், சில நாட்களுக்கு முன்பு கெளசல்யா, வீட்டில்  இருந்த  30 சவரன்  நகைகள் மற்றும்  2 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த தீபன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, ரகுவரன் என்பவரின் வீட்டில் இருந்த கெளசல்யாவை கைது செய்தனர்.

ரகுவரன், கெளல்யாவின் 2வது கணவர் என்பதும், சமூகவலைத்தளங்கள் மூலம் ஆண்களை ஏமாற்றி கெளசல்யா 4 திருமணங்கள் செய்ததும் விசாரணையில் அம்பலமானது.