கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது

260

கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு 5 பேரும், கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.