சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்

2043

சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜூன் 20ஆம் தேதி முதல் சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகபட்ச சாத்திய அளவான 103 எம்.எல்.டி ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், விரைவில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வுடன் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண எதிர்ப்பார்ப்பதகாவும், இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை நாம் உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.