Monday, May 19, 2025

”எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்”… கோலியிடம் ‘கெஞ்சி’ கூத்தாடும் BCCI? 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. ரன் மெஷின், சேஸிங் மாஸ்டர், King என ரசிகர்களால் விதவிதமாக அழைக்கப்படும் கோலி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்துள்ளார்.

அத்துடன் ஏகப்பட்ட புதிய சாதனைகளையும் படைத்துள்ளார். அண்மையில் IPL தொடரில் இவர் ஆடிய விதத்தை பார்த்து, விராட் இன்னும் கொஞ்ச காலம் T20 தொடரில் ஆகியிருக்கலாம் என, கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

அந்தளவுக்கு 36 வயதிலும் நல்ல Fitness உடன் திகழ்கிறார். 2024ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு T20 தொடரில் இருந்து விலகுவதாக ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இணைந்தே அறிவித்தனர்.

இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக, ரோஹித் சர்மா அண்மையில் அறிவித்தார். இதனால் விராட் கோலியும் ஓய்வினை அறிவித்து விடுவாரோ என்ற அச்சம், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தநிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக, விராட் BCCIயிடம் தெரிவித்து விட்டார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2025-2027ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரை, விராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று BCCI எதிர்பார்த்திருந்தது.

ஆனால், ”உங்க சகவாசமே வேண்டாம். ஆள விடுங்க” என்று கோலி பிடிவாதம் பிடிக்கிறாராம். என்றாலும் BCCI தரப்பு சற்றும் மனம் தளராமல், ”உங்க சேவை எங்களுக்குத் தேவை” என்று விராட்டிடம், ஓய்வு முடிவினை தள்ளி வைக்கச்சொல்லி, கடந்த 1 மாத காலமாக கெஞ்சிக் கூத்தாடி வருகிறதாம்.

இந்திய கிரிக்கெட்டின் பிராண்டாக விராட் கோலியே அறியப்படுகிறார். அண்மையில் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் கொண்டு வரப்பட்டபோது, விராட் புகைப்படத்தை பயன்படுத்தி தான் அதை அறிவித்தனர். கேப்டனாக இல்லை என்றாலும் ICC நடத்தும் தொடர்களில், கோலியே மிகப்பெரும் கவனம் பெறுகிறார்.

எனவே தான் புதிய டெஸ்ட் கேப்டனை அறிவித்து, இந்திய அணி கொஞ்சம் செட்டிலாகும் வரையில், விராட் விளையாட வேண்டும் என்று BCCI உடும்புப்பிடியாக இருக்கிறது. இதனால் கோலி தன்னுடைய ஓய்வு முடிவினை மறுபரிசீலனை செய்வாரா?, என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Latest news