விஜயதாரணி த.வெ.க.வில் இணைந்தார்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும், அவர் கட்சியில் இணைந்த பின்னரும் பா.ஜ.க.வில் அவருக்கு எந்த முக்கியப் பதவியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை உருவானதாகவும், அதனால் அவர் விரக்தி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே அதிகரித்து வருவதாகவும், அந்த மாற்றத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். வருங்கால தலைமுறையின் வளர்ச்சிக்காக த.வெ.க. பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் ஊழல் இல்லாத நிர்வாகம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் த.வெ.க. செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மக்கள் அரசியல் மாற்றத்திற்காக விஜயை ஆதரித்து வருவதாகவும், அவரை முதலமைச்சராகக் காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மக்கள் சாதி, மதம், பண பலம் மற்றும் அதிகார செல்வாக்கை மீறி மாற்றத்திற்காக ஒன்றிணைந்து வருவதாகவும், அந்த மாற்றத்திற்கு விஜய் தலைமையிலான ஆட்சி வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை விஜய் உருவாக்குவார் என்றும், அது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்றும் விஜயதாரணி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News