ரஷ்யா – உக்ரைன் போரால் கலைந்த எலான் மஸ்கின் கனவு

361
Advertisement

ரஷ்யா – உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உலக நாடுகள் வலியுறுத்தியபோதும், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் அதற்கான எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இருநாடுகளும் தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் இருப்பதால், பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், போர் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்களும், வீரர்களும் நாள்தோறும் உயிரிழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.


பலர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்றுள்ளனர். இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் பங்குச்சந்தைகள் மட்டுமின்றி உணவு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே பங்குச்சந்தைகளில் வராலாறு காணாத திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், ஆட்டோபொபைல் துறையில் மூலப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் பன்மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. நிக்கலின் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. லித்தியத்தின் விலை இரட்டிப்பாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலகில் உருவாகும் நிக்கலில் 7 விழுக்காடு ரஷ்யாவில் இருந்து கிடைக்கிறது. மேலும், அலுமினியம் மற்றும் பல்லேடியம் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா இருப்பதால், போரால் அவற்றின் ஏற்றுமதி பாதித்துள்ளது.

இதனால், எலக்டிரிக் கார்கள் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை எதிரொலி, கார்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழலுக்கு டெஸ்லா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எலக்டிரிக் கார்களின் விலை 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் விலை உயரும் அபாயம் இருப்பதால், மின்சார கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவு குறையலாம். இது குறைந்த விலையில் மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்ற கனவில் இருந்த எலான் மஸ்கிற்கு மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது. 35 விழுக்காடு வரை மின்சார கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.