
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முந்தய தினமான 22-ம் தேதி இரவு 9.52 மணிக்கு E(O)PS means End Of PaneerSelvam என்று பதிவிடுகிறார்.
அதாவது பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி முடிவுகட்டிவிட்டார் என்ற அர்த்தத்தில் எழுதுகிறார்.
பொதுக்குழு கூட்டம் நடந்த 23-ம் தேதி காலை 8.04 மணிக்கு
அதிமுகவின் மதுரை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் ராஜ் சத்யன்,
இப்படி தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
தேதிகள் மாறலாம், தலைமை மாறாது. தலைமையை தேர்ந்தெடுப்பது, தொண்டர்களும்,மக்கள் மன்றமும் மட்டுமே… #கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார்
முழுக்க முழுக்க அதிமுகவின் ஐ.டி. பிரிவு பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும்,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் மாறிவிட்டது
பொதுக்குழு ஜூலை மாதம் 11-ம் தேதி மாற்றப்படுவதும்,அப்போது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்படப்போகிறார் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம் என்பதை அதிமுகவின் ஐ.டி. பிரிவினர் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
ஸ்ரீவாரி மண்டபத்தில் கூட்டம் நடந்த போது, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.ஷண்முகம் அவைத்தலைவராக தேர்தெடுக்கப்பட்ட தமிழமகன் உசேனிடம் கோரிக்கை வைத்தது,அதன் அடிப்படையில் அவர் அடுத்த மாதம் 11-ம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவித்தது எல்லாம் தற்செயலான விஷயமல்ல.முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக
செயல்படும் EPS 24×7 என்ற முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவு அதிர்ச்சியளிக்கும் ரகமானது.
மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம். நிம்மதியாக செல்லுங்கள்.
அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இது வரை யாரும் கண்டதில்லை.
முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் அவமானம் மிகவும் கொடியது.
தன்வினை தானே தன்னை சுடும்.
இத்தனை எதிர்ப்புகள், அதிருப்தி, தொண்டர்களின் அவநம்பிக்கை அனைத்தையும் தாண்டி யாருக்காக எதற்காக இந்த பதவியை இருக்க கட்டி பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்?
அப்படியே அந்த பதவி கிடைத்தாலும் அந்த பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும்? கட்சியின் தலைவனாக இருந்தாலும், தொண்டர்களின் தலைவனாக OPS இருக்க முடியுமா?
பன்னீர்செல்வம் இனியும் அவமானங்களையும் தொண்டர்களின் கோவத்தையும் சம்பாதிக்காமல் கட்சியில் இருந்து விலகி நிற்பது நல்லது. தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு அமைதியாக வாழ்வை நகர்த்தலாம்.
கட்சி விசுவாசிகளை, கட்சியை எதிர்த்து தான் பெரியவன் என்று நிரூபிக்கும் போக்கை கைவிட வேண்டும். அப்படி நிரூபிக்க முயற்சித்து தோற்றவர்கள் ஏராளம்.
மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம். நிம்மதியாக செல்லுங்கள்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்,ஐ.டி பிரிவினர் 10 தினங்களில் அதிமுகவை விட்டே ஓபிஎஸ் விலக வேண்டுமென வெளிப்படையாக கோரிக்கை வைக்கவில்லை.மாறாகபன்னீர்செல்வத்தை மிரட்டுகின்றனர்.
எந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக ஓபிஎஸ் தர்மயுத்தத்தின் போது
தன்னுடைய ஆதரவை அதிகப்படுத்திக்கொண்டாரோ,அதே சமூகவலைத்தளங்கள் வாயிலாக அவரை வீழ்த்த கடும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
தாக்குப்பிடிப்பாரா ஓபிஎஸ் ?