தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள், அனைவருக்கும் அரசு வேலை – சீமான் தேர்தல் வாக்குறுதி

நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கைகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கைகளின்படி, நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும்.

மக்களின் கருத்துக்கு ஒரு அரசு இயங்க முடியாது; மக்களின் நலனுக்காக மட்டுமே இயங்க முடியும் என்பதே கொள்கை.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.

மதுரையை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், சென்னையை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவையை தொழில் தலைநகராகவும், கன்னியாகுமரியை தமிழர் மெய்யியல் தலைநகராகவும், திருச்சியில் நிர்வாகத் துறை தலைநகராகவும் மாற்றப்படும்.

மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை திருச்சிக்கு மாற்றியமைக்கப்படும்.

அனைவருக்கும் அரசு வேலை.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிற்சி முறைக் கல்வி பயிற்றுவிக்கப்படும்.

பல கோடி பனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

குடிநீர் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும். கடலில் வீணாக 2,300 டிஎம்சி மழைநீர் கலப்பதைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்படும்.

இனி படிக்காதவர் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

மாநில அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்ட மாற்றங்களுக்காக பாடுபடுவோம்.

மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகளில் மாநிலத்துக்கு 75 சதவிகிதமும், மத்திய அரசுக்கு 25 சதவிகிதமும் வழங்க வலியுறுத்தப்படும்.

வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்படும் வகையில், 100 சதவிகிதம் வாக்களித்ததற்கான அரசின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படும்.

3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்டு வரப்படும்.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு தனித் தொகுதி; விளையாட்டுத் துறையில் சம வாய்ப்பும் இடம்பெறும்.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளாக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைச்சகம் அமைக்கப்படுவதுடன், உள்ளாட்சியில் 5 சதவிகித இட ஒதுக்கீடு.

Related News

Latest News