தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சியில் நடத்திய பிரச்சார கூட்டம், மக்கள் திரளால் அரசியல் சார்ந்த பகுதிகளில் பேசுபொருளாகியுள்ளது. அந்த கூட்டத்தில், நிர்வாகம் அனுமதித்த நேரத்தை விஜய் சரியாக கடைபிடிக்கவில்லை. நேரம் தவறி உரையாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்படி, பொது கூட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பு உள்ளது. அதனை மீறி உரை நடைபெற்றால், சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்ததாக கருதப்படும். இந்தச் சூழலில், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறிக்கை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு விஜய்யின் கட்சி தரப்பில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் உரை தாமதமாகத் தொடங்கியது. இது நோக்கத்தோடு செய்யப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், கூட்டம் அமைதியாகவே முடிந்தது என்பதால், வழக்கு பதிவு செய்யும் அவசியமே இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்படலாம்.
எப்படியிருந்தாலும், இந்தச் சம்பவம் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகிறது. விஜய்யின் கூட்டங்கள் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாக ரீதியாகவும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
அடுத்தடுத்த நிகழ்வுகளில், சட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து அவரது கட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் எந்தவித கட்டுப்பாடும் அடிப்படை ஒழுக்கமும் இல்லாத ஒரு சில ரசிகர்கள் விஜய்-க்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளனர்.
மொத்தத்தில், நேர வரம்பு மீறலால் விஜய் மீது ‘வழக்கு பாயுமா?’ என்ற கேள்வி எழுந்தாலும், இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
