Monday, June 23, 2025

சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்! வியக்கும் உலக நாடுகள்! எப்படி செயல்படும்?

இப்போதெல்லாம் நாம் ட்ரோன் என்றாலே ஒரு கையில் பிடிக்கக்கூடிய அளவில் இருக்கும் மெஷின்களை தான் நினைக்கிறோம். ஆனால் சீனாவின் விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் ட்ரோன், அதற்கு முழுமையான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அது தான் கொசு அளவிலான ஒரு சிறிய ட்ரோன்!

மத்திய சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த மினியேச்சர் ட்ரோன், நிஜமாகவே ஒரு கொசுவைப் போலவே தோற்றமளிக்கிறது. சுமார் 1.3 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த ட்ரோன், இருபுறத்திலும் இலை போன்ற அமைப்புகளுடன் இரு சிறிய இறக்கைகள் மற்றும் மூன்று முடி போன்ற மென்மையான கால்களைக் கொண்டுள்ளது.

இந்த ட்ரோனை ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்த முடிகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, இந்த முன்மாதிரி கடந்த வாரம் சீனாவின் இராணுவ சேனலான CCTV 7ல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, “என் கையில் கொசுவைப் போல ஒரு ரோபோ இருக்கிறது. இது போல் சிறிய ட்ரோன்கள் போர்க்களங்களில் உளவு மற்றும் சிறப்பு பணிகளுக்கு மிகவும் உகந்தவை” என்று ஆய்வாளரும் மாணவருமான லியாங் ஹெக்ஸியாங் தெரிவித்துள்ளார்.

இந்த வகை மைக்ரோ ட்ரோன்கள், பெரிதாக கவனிக்கப்படாமல் இராணுவ கண்காணிப்புகளுக்கு பயன்பட முடியும். அதே நேரத்தில், அவசரநிலையில் இடிபாடுகளுக்குள் புகுந்து உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கவும், சுற்றுச்சூழல் தரங்களை — அதவாது காற்றையோ, தண்ணீரையோ — சென்சார் மூலம் அளவிடவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியும்.

இவை மிகவும் திறமையானவை என்றாலும், சில சவால்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுமை எடுக்கும் திறன் குறைவாக இருக்கும். அதனால் மிகப்பெரிய உபகரணங்களை ஏற்றுச்செல்ல முடியாது. அதேபோல், சிறிய பேட்டரிகள் காரணமாக விமான நேரமும் குறைவாகவே இருக்கும்.

இருப்பினும், தொழில்நுட்பம் மேம்படுகிற போதெல்லாம் — பேட்டரி ஆயுள், சென்சார் திறன், செயற்கை நுண்ணறிவு போன்றவைகளில் — இவை நாளைய உலகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியவை என்பதை மறுக்க முடியாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news