சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது ஆனால் அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே வந்து நின்றது. இதனால் பதட்டமான பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் இது குறித்து கேட்டபொழுது ஓட்டுநர் மது போதையில் இருந்ததை கண்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் தகவல் தெரிவித்த பொழுது அங்கிருந்த நேரக் காப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் நடத்துனரை விட்டுவிட்டு பேருந்தை ஓட்டுநர் மனோகரன் மீண்டும் இயக்கி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே பேருந்தை எடுத்து மதுரை செல்லும் சாலையில் நிறுத்திவிட்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பேருந்து பணிமனைக்கு தகவல் தெரிவித்து மாற்று ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு மானாமதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டது. இதில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.