தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிகார ஆட்டம் மற்றும் உட்கட்சிப் பூசல் தற்போது அதிமுகவில் அரங்கேறத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு ஒரு ‘அதிர்ஷ்ட தேவதையாக’ கைகொடுக்க அதிமுகவின் ஒரு மிகப்பெரிய பகுதி எம்.எல்.ஏக்கள் தயாராகி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு மீள முடியாத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக ‘லாட்டரி அதிபர்’ மார்ட்டின் குடும்பம் உருவெடுத்துள்ளது.
அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கிளம்பியுள்ள 36 எம்.எல்.ஏக்கள் கொண்ட அதிருப்திக் குழுவில், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். இக்குழுவிற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ரகசியமாக இருந்து காய்நகர்த்தி வருகின்றனர்.
இந்த மிகப்பெரிய நகர்வின் பின்னணியில் மார்ட்டினின் மருமகனும், முதலமைச்சர் விஜய்யின் வலது கரமாகச் செயல்பட்டு வருபவருமான ஆதவ் அர்ஜுனா மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மார்ட்டின் குடும்பம் தங்களது அரசியல் மற்றும் பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி, அதிமுகவை உடைத்து விஜய்யின் ஆட்சியை நிலைநிறுத்தத் திரைமறைவில் மிக நுணுக்கமாக வேலை செய்து வருகிறது.
அதிமுகவில் மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது. ஆனால் தற்போது லீமா ரோஸ் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வியூகத்தால் சுமார் 36 பேர் அணி திரண்டுள்ளதால், அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமியால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
உண்மையில், அதிமுகவில் லீமா ரோசுக்கு எம்.எல்.ஏ வேட்பாளராக வாய்ப்புத் தரும்போதே, இது பிற்காலத்தில் கட்சிக்கு ஆபத்தாக முடியும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியைப் பலமுறை எச்சரித்தனர். ஆனால், நிதி நெருக்கடி மற்றும் பல காரணங்களால் எடப்பாடி பழனிசாமி அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் லீமா ரோசுக்கு சீட் கொடுத்தார்.
இன்று அதே லீமா ரோஸ், எடப்பாடியின் தலைமைக்கே சவால் விடும் வகையில் ஒரு தனி அணியை உருவாக்கி, விஜய்யின் ஆட்சிக்குத் தோள் கொடுக்கத் தயாராகிவிட்டார். இது எடப்பாடி பழனிசாமி தனது சொந்தக் கையாலேயே தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்துக்கொண்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் விஜய்க்கு தற்போது விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு இருந்தாலும், அது ஒரு ‘பார்டர்’ கணக்காகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய ஊசலாடும் சூழலில், மார்ட்டின் குடும்பத்தின் ஆதரவோடு அதிமுகவின் ஒரு மிகப்பெரிய பகுதி விஜய்க்கு ஆதரவு அளித்தால், அது அவருக்கு ஒரு அசைக்க முடியாத நிலையான ஆட்சியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இது அதிமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை முற்றிலுமாக ஓரங்கட்டும் ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடி அரசியல் பிரவேசம், தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகார மையத்தையும் மார்ட்டின் குடும்பத்தின் பக்கம் திருப்பியுள்ளதாகத் தெரிகிறது. கோட்டைக்குள் இனி விஜய்யின் குரலோடு, மார்ட்டின் குடும்பத்தின் ஆதிக்கமும் ஓங்கி ஒலிக்கும் என்பதே தற்போதைய கள நிலவரம்.
