‘அப்ப பேசினீங்களே.. இப்ப ஏன் அமைதி?’ – முதல்வர் விஜய்யை வளைக்கும் திமுக!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஒரு லாக்-அப் மரண விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9-ஆம் தேதி 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, தலைமை வார்டன் சுரேஷ் உள்ளிட்ட சிறை ஊழியர்கள் சபரி வர்மனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை முன்வைத்து, எதிர்க்கட்சியான திமுக, முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் உள்துறை மற்றும் காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், இந்த மரணத்திற்குப் பொறுப்பேற்று உரியப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள பொறுப்பில் இருப்பவர், இந்த லாக்-அப் மரணத்தின் பின்னணி குறித்துப் பொதுமக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

திமுகவின் இந்தத் தாக்குதல் இதோடு நிற்கவில்லை. கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த லாக்-அப் மரணங்களுக்கு எதிராக விஜய் எவ்வளவு ஆவேசமாகப் பேசினார் என்பதை திமுக நினைவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மரணத்திற்கு மன்னிப்பு கேட்டபோது, “சார், எங்களுக்கு உங்கள் மன்னிப்பு வேண்டாம், நீதிதான் வேண்டும்” என்று விஜய் முழங்கியதை திமுக நிர்வாகிகள் இப்போது மேடைதோறும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

“அன்று நீதியைக் கேட்ட அதே விஜய், இன்று தனது ஆட்சியில் மரணம் நிகழ்ந்தபோது ஏன் மௌனமாக இருக்கிறார்?” என்று திமுக செய்தித் தொடர்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “இன்று தமிழக மக்கள் விஜய்யிடம் கேட்பது ரீல்ஸ் கிடையாது, நீதிதான்” என்று திமுக பிரமுகர் பரந்தாமன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது லாக்-அப் மரணங்களைப் பெரிய அளவில் அரசியலாக்கிய விஜய், இப்போது அதிகாரத்தில் இருக்கும்போது காவல் துறையின் அத்துமீறல்களை எப்படிக் கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிரடி மாற்றங்களைச் செய்த முதல்வர் விஜய்க்கு, இந்த லாக்-அப் மரண விவகாரம் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. விஜய்யின் மௌனம் தொடருமா அல்லது அவர் அதிரடி ஆக்ஷனில் இறங்குவாரா என்பதைத் தமிழகமே ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News