தங்கம் செய்த ‘சம்பவம்’! 3 மாதங்களில் 10,000 கோடி வருமானம்! மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்திய பிறகு, அரசுக்குக் கிடைத்துள்ள வருமானம் மற்றும் தங்கம் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முக்கியத் தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே 13 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான வெறும் மூன்று மாத காலத்திற்குள், மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதி வரி மூலம் மட்டும் சுமார் 10,463 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் சிங்கப்பகுதியாகத் தங்கம் மூலம் மட்டுமே 10,040 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தப்பட்டதே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். பிளாட்டினம் மீதான வரியும் 15.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேவையற்ற இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைத் பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இருப்பினும், இறக்குமதி வரி உயர்ந்ததால் சட்டவிரோதமாகத் தங்கம் கடத்தி வருவது அதிகரிக்கும் என்ற கவலையும் நிலவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 287 தங்கம் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 161 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவாதத்தின் போது, இந்தியக் குடும்பங்களில் பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் தங்கத்தின் அளவு குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இந்தியக் குடும்பங்களில் லாக்கர்களிலும், பீரோக்களிலும் பயன்பாடின்றி எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தரவுகள் ஏதும் அரசிடம் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

இந்தியர்கள் தங்கத்தைச் சேமிப்பாகவும், பாரம்பரியமாகவும் கருதுவதால், அதன் துல்லியமான அளவைக் கணக்கிடுவது அரசுக்குச் சவாலான காரியமாகவே உள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தங்கக் கையிருப்பு குறித்தும் முக்கியமான விளக்கம் அளிக்கப்பட்டது.

மே 29, 2026 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவு 880.52 டன்களாக உள்ளது. ரிசர்வ் வங்கி தனது வசம் உள்ள தங்கத்தைச் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ததாக வெளியான செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்கம் இறக்குமதி வரி உயர்வு அரசுக்குக் கூடுதல் வருவாயைத் தந்தாலும், எல்லைகளில் தங்கம் கடத்தலைத் தடுப்பது வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினருக்கு (DRI) ஒரு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளது.

Related News

Latest News