விஜய் இரட்டை வெற்றி… அரசியலில் அதிரடி…

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தவெக முன்னிலை வகிப்பது கவனிக்கத்தக்கது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் 1,00,582 வாக்குகள் பெற்று 44,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் 82,885 வாக்குகள் பெற்று 26,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இரு முக்கிய தொகுதிகளிலும் அவர் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வென்றார். பின்னர் 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்றார். தற்போது அந்த வரலாற்றை மாற்றி விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

விஜயின் தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களை மையமாகக் கொண்ட பல திட்டங்கள் இடம்பெற்றன. மாதாந்திர நிதி உதவி, இலவச எல்பிஜி சிலிண்டர்கள், அரசு பேருந்துகளில் இலவச பயணம், மணப்பெண்களுக்கு தங்க உதவி, குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவி போன்றவை இதில் அடங்கும். அவரது பிரசாரம் மாநிலம் முழுவதும் பெரும் கவனம் பெற்றது.

Related News

Latest News