ஆளுநர் மூலம் காய் நகர்த்தும் டெல்லி? விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டும் எதிர்க்கட்சிகள்! நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்!

தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதனால் ஆளுநர் மாளிகையை மையமாகக் கொண்ட அரசியல் நகர்வுகள், தேசிய அரசியலுடனும் இணைத்து பார்க்கப்படுகின்றன.


த வெ க தலைவர் விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், 118 உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு இருந்தால்தான் அழைப்பு வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தனிப்பெரும் கட்சிக்கு முதலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அரசியல் நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுவரை விஜயை கடுமையாக விமர்சித்து வந்த சில எதிர்க்கட்சிகள்கூட தற்போது மாநில உரிமை என்ற அடிப்படையில் அவருக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. “தமிழக மக்களின் தீர்ப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்றும், “வெளியிலிருந்து அரசியல் தலையீடு ஏற்க முடியாது” என்றும் பல்வேறு தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், மத்திய அரசு முன்னெடுத்து வரும் ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளிகள் திட்டம், மும்மொழிக் கொள்கை விவாதத்தை மீண்டும் அரசியல் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது. மொழி, கல்வி, மாநில உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தலுக்கு பிந்தைய அரசியலில் முக்கிய இடம் பிடித்துள்ள நிலையில், இந்த அரசியல் நெருக்கடியை விஜய் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதிலேயே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Related News

Latest News