தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ₹2,500 நிதியுதவி திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை மாநில நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டுள்ளார்.அதில் மகளிர் உரிமைத் தொகை விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக மரியா வில்சன் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்களுக்கு செல்ல வேண்டிய நிதி, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சென்றடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “மகளிருக்கான உரிமைத் தொகை விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்துள்ள புகார்கள் மீது தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசின் நிதி சென்றடைவதை தவெக அரசு உறுதி செய்யும். அதிகாரிகள் மட்டத்தில் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
தமிழகப் பெண்களிடையே இந்த திட்டம் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ₹2,500 மகளிர் நிதியுதவித் திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான அறிவிப்பு வெளியாகும் என்று மரியா வில்சன் அறிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைமை அளித்த இந்த வாக்குறுதி பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குடும்பத் தலைவிகள் பலரும் இந்த உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதைய நிதிச் சுமை இருந்தபோதிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக அமைச்சர் மரியா வில்சன் தெரிவித்தார்.மேலும், தற்போதைய நிதி நிலைமை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த அறிவிப்புகள் தமிழக அரசியல் களத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
